Wednesday, 18 February 2015
10th tamil samacheir kalvi part 2
சிலப்பதிகாரம்
சொற்பொருள்:
கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்
தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
பலியோடு படரா – மறநெறியில் செல்லாத
அடர்த்துஎழு குருதி - வெட்டப்பட்ட இடத்தினின்றும் பீறிட்டு எழும் செந்நீர்
பசுந்துணி – பசிய துண்டம்
தடக்கை – நீண்ட கைகள்
அறுவற்கு இளைய நங்கை – பிடாரி
இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாடச் செய்த காளி
கானகம் – காடு
உகந்த – விரும்பிய
தாருகன் – அரக்கன்
பேர்உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை
செற்றம் – கறுவு
செயிர்த்தனள் - சினமுற்றவள்
பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு
கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள்
தேரா – ஆராயாத
எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
இமையவர் - தேவர்
புள் – பறவை
புன்கண் – துன்பம்
கடைமணி - அரண்மனை வாயில்மணி
ஆழி – தேர்ச்சக்கரம்
ஏசா -பழியில்லா
கோறல் - கொல்லுதல்
கொற்றம் - அரச நீதி
நற்றிறம் - அறநெறி
படரா – செல்லாத
வாய்முதல் – உதடு
இலக்கணக்குறிப்பு:
மடக்கொடி – அன்மொழித்தொகை
தேரா மன்னா, ஏகாச் சிறப்பின,; படராப் பஞ்சவ, அடங்காப் பசுந்துணி– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தடக்கை – உரிச்சொற்றொடர்
புன்கண், பெரும்பெயர,அரும்பெறல், பெருங்குடி, கடுங்கோல், செங்கோலன், நன்மொழி– பண்புத்தொகை
உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் – வினைத்தொகை
அவ்வூர் – சேய்மைச்சுட்டு
வாழ்தல் – தொழிற்பெயர்
என்கால் என்பெயர், நின்னகர், என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை
புகுந்து – வினையெச்சம்
தாழ்ந்த, தளர்ந்த – பெயரெச்சம்
வருக, தருக, கொடுக – வியங்கோள் வினைமுற்று
பகுபத உறுப்பிலக்கணம் :
வருக - வா (வரு) + க. வா - பகுதி, வா - வரு என்றானது விகாரம், க - வியங்கோள் வினைமுற்று விகுதி;
வந்தோய் - வா (வ) + த் (ந்) + த் + ஓய். வா - பகுதி, வா - வ எனக் குறுகியது விகாரம், த் - சந்தி, த் - ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஓய் - முன்னிலை ஓருமை வினைமுற்று விகுதி;
தீர்த்தோன்- தீர் + த் + த் + ஓன். தீர் - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஓன் - ஆண்பால் வினைமுற்று விகுதி;
உரைத்தது - உரை + த் + த் + அ + து. உரை - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, அ - சாரியை, து - ஓன்றன்பால்; வினைமுற்று விகுதி;
கேட்ட - கேள் (ட்) + ட் + அ. கேள் - பகுதி, ள் - ட் ஆனது விகாரம், ட் - இறந்தகரல இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி;
வீழ்ந்தனள் - வீழ் + த் (ந்) + த்+ அன் + அள். வீழ் - பகுதி, த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, அன்- சாரியை, அள் - பெண்பால் வினைமுற்று விகுதி.
பிரித்தறிதல்:
எள்ளறு = எள் + அறு
புள்ளுறு = புள் + உறு
அரும்பெறல் = அருமை + பெறல்
பெரும்பெயர் = பெருமை + பெயர்
அவ்வூர் = அ + ஊர்
பெருங்குடி = பெருமை + குடி
புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
பெண்ணணங்கு = பெண் + அணங்கு
நற்றிறம் = நன்மை + திறம்
காற்சிலம்பு = கால் + சிலம்பு
செங்கோல் = செம்மை + கோல்
ஆசிரியர் குறிப்பு;
இளங்கோவடிகள் சேரமரபினர்.
பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.
தமையன் = சேரன் செங்குட்டுவன்
இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.
சமய வேறுபாடற்ற துறவி.
பாரதியார் இவரை, “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றார்.
நூல் குறிப்பு:
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
புகார்க்காண்டம் = 10 காதை
மதுரைக்காண்டம் = 13 காதை
வஞ்சிக்காண்டம் = 7 காதை
இக்காப்பியம் “உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள்” என அழைக்கப்படுகிறது.
முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்.
வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
“இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
நூலெழுந்த வரலாறு:
சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் ‘அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” என்று கூறினார்.
சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுக” என்றார்.
நூற்கூறும் உண்மை:
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
தமிழ் வளர்ச்சி
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.
-பாவேந்தர் பாரதிதாசன்
சொற்பொருள்:
தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
சுவடி – நூல்
எளிமை – வறுமை
நாணிடவும் – வெட்கப்படவும்
தகத்தகாய – ஒளிமிகுந்த
சாய்க்காமை – அழிக்காமை
நூற்கழகங்கள் - நூலகங்கள்
களைந்தோம் - நீக்கினோம்
தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்
இலக்கணக்குறிப்பு;
புதிது புதிது, சொல்லிச் சொல்லி – அடுக்குத்தொடர்
செந்தமிழ் – பண்புத்தொகை
சலசல – இரட்டைக்கிளவி
பகுபத உறுப்பிலக்கணம்::
கழித்தோம் - கழி + த் + த் + ஓம். கழி - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஓம் - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி.
களைந்தோம் - களை + த்(ந்) + த் + ஓம். களை - பகுதி, த் -சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஓம் - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி.
பிரித்தறிதல்:
வெளியுலகில் = வெளி + உலகில்
செந்தமிழ் = செம்மை + தமிழ்
ஊரறியும் = ஊர் + அறியும்
எவ்விடம் = எ = இடம்
ஆசிரியர் குறிப்பு;
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார்.
தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார்.
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள்.
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
பாவேந்தரின் புகழ்மொழி:
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
எனப் பாவேந்தர் பெரியாரை புகழ்கிறார்.
பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
ஒன்று, அடிப்படைத் தேவைகள் = பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை = குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு
பெண்கல்வி:
பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
“அங்கள் பங்களைப் படிக்கச் வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவு அட்டர சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.
பெண்ணுரிமை:
“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று சிந்தித்தவர் பெரியார்.
பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்க வேண்டும்” என்று வலியுறித்தினார்.
சொத்துரிமை:
பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு காரணம் என்று உணர்ந்தார்.
அதற்காகக் அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.
அரசுப்பணி:
அரசாங்கத்தின் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் பொது நம் சமுதாயத்தில் புரட்ச்சி ஏற்படும் என்றார்.
குழந்தைதிருமணம்:
குழந்தை திருமணம் பற்றி “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.
மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்:
சமுதாயத்தில் முறையான அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான், இம்மாதிரியான தீமைகள் ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாற வேண்டும்.
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்றார்.
கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றார்.
ஒழுக்கம்:
ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்றார்.
பெரியார், பெண்களே சமூகத்தின் கண்கள் என்று கருதியவர்.
இலக்கணம்:
சொல்:
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்த்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள்.
பதம் - பகுபதம் ( பகுக்கவியலும் பதம் ); பகாப்பதம் ( பகுக்கவியலாபதம்
மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
கிளவி - இரடடைக்கிளவி (இரட்டைச்சொல்
(எ-டு)
பூ ,கை, தா, வா - இவை ஓரெழுத்துச் சொற்கள்.
மண், மாந்தர், நடந்தனர் - இவை இரண்டு முதலாகப் பல எழுந்துகள் தொடர்ந்த சொற்கள்.
மூவகை மொழிகள்
மொழி தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும்.
1. தனிமொழி
ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.
(எ-டு) வா, கண், செய்தான்.
2. தொடர்மொழி
இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி
(எ-டு)
1. படம் பார்த்தாள்.
2. பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருக்கின்றன.
3. பொதுமொழி
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதேசொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது,.. பொதுமொழி. .
(எ-டு) அந்தமான்
அந்தமான் என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த + மான் எனப் பிரிந்து நின்று, அந்த மான் (விலங்கு) என வேறுபொருளையும் தருகின்றது.
இதேபோல், பலகை, வைகை, தாமரை, வேங்கை முதலியன தனிமொழியாகவும் பொதுமொழியாகவும் வருவதை அறிக.
ஒருமொழி ஒருபொருள னவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன. - நன்னூல், 260
வினைச்சொல்:
இராமன் வந்தான். கண்ணன் நடந்தான்.
இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள். அவையே எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள். இவையே பயனிலைகளாகவும் ( முடிக்கும் சொற்களாகவும் ) உள்ளன. இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.
வினைமுற்று:
அருளரசு வந்தான். வளவன் நடந்தான்.
இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும்.
“வந்தான், நடந்தாண்' என்னும் வினைமுற்றுகள் “ஆன்” என்னும் விகுதி பெற்றுள்ளதால், உயர்திணையையும், ஆண்பாலையும், ஒருமை என்ற எண்ணையும், படர்க்கை இடத்தையும், உணர்த்துகின்றன, என்ற இடைநிலை வந்துள்ளதால் (நட + த் ( ந் ) + த் + ஆன்);
(வா (வ) + த் (ந்) + த் + ஆன்) இஃ;து இறந்த காலத்தையும் உணர்த்துகிறது
வினனமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்; முக்காலங்களில் ஒன்றை உணர்த்தும்; திணை, பால், எண், இடங்களைக் காட்டும்
இவ்வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று.
(எ-டு) உழுதான்
செய்பவன் - உழவன்
கருவி - கலப்பை
நிலம் - வயல்
செயல் - உழுதல்
காலம் - இறந்தகாலம்
செய்பொருள் -நெல்
செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே. - நன்னூல், 320
குறிப்பு வினனமுற்று:
பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினை-முற்று எனப்படும்.
அவன் பொன்னன் - பொன்னை உடையவள் - பொருள்
அவன் விழுப்புரத்தான் - விழுப்புரத்தில் வாழ்பவன் - இடம்
அவன் சித்திரையான் - சித்திரையில் பிறந்தவன் - காலம்
அவன் கண்ணன் - கண்களை உடையவன் - சினை
அவன் நல்லன் - நல்ல இயல்புகளை உடையவன் - குணம்
அவன் உழவன் - உழுதலைச் செய்பவன் - தொழில்
பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே.- நன்னூல், 321
அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த “பொன்னன்”, என்பதே குறிப்பு வினை ஆகும். பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.
எச்சம்
கயல்விழி படித்தாள். கோதை சென்றாள்.
இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள்.
இவ்வினைமுற்றுகள் சில இடங்களில் ஆள், என்னும் விகுதி குறைந்து படித்த, சென்ற எனவும், படித்து, சென்று எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்; ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.
பெயரெச்சம்
படித்த கயல்விழி. சென்ற கோதை,
படித்த, சென்ற என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி, கோதை எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த கயல்விழி, சென்ற கோதை
நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை
எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை
இது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
தெரிநிலைப் பெயரெச்சம்
வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான்.
இத்தொடரில் வந்த என்பது பையன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும்.
செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள்.
இவை முக்காலத்தையும் செயலையும் வெளிப்;படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறாம் எஞ்சி நிற்கும். இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
(எ-டு)
உண்ட இளங்கோவன்.
செய்பவன் - இளங்கோவன்
கருவி - கலம்
நிலம் - வீடு
செயல் - உண்ணுதல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் - சோறு
உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம்.
உடன்பாடு - எதிர்மறை
(எ-டு) உண்ட இளங்கோவன் - உண்ணாத இளங்கோவன்
குறிப்புப் பெயரெச்சம்
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ-டு) நல்ல பையன்
இத்தொடரில் நல்ல என்னும் சொல் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது.
இது காலத்தைக் (இன்று நல்ல பையன், நேற்று நல்ல பையன், நாளை நல்ல பையன்) குறிப்பால் உணர்த்தும்.
உடன்பாடு - எதிர்மறை
(எ-டு) நல்ல மாணவன் - தீய மாணவன்
வினையெச்சம்
முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
(எ-டு)படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான்.
அதாவது, ஓர் எச்சவினை, வினையக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகால வினையெச்சம் - படித்து வந்தான், ஓடிச் சென்றான்.
நிகழ்கால வினையெச்சம் - படித்து வருகின்றான் ஓடிச்செல்கின்றான்
எதிர்கால வினையெச்சம் - படித்து வருவான், ஓடிச் செல்வான்.
இவ்வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.
பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா. வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா.
மேலே காட்டியதுபோல அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும்.
தெரிநிலை வினையெச்சம்
படித்துத் தேறினான். படிக்கச் செல்கின்றான்
இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கினறான்; ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்பு வினையெச்சம்
மெல்லப் பேசினான். கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.
இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
முற்றெச்சம்
மைதிலி வந்தனள் பாடினள். முருகன் படித்தனன் தேறினன்.
இத்தொடர்களில், வந்தனள், படித்தனன் என்னும் வினைமுற்றுகள் வந்து, படித்து என்னும் வினையெச்சப் பொருள்களில் நின்று, வேறு வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொணடு முடிவதே முற்றெச்சம் எனப்படும்.
மொழித்திறன் பயிற்சி
தொகைச்சொல்
கனிகளுள் எவற்றை முக்கனி எனக் குறிப்பிடுகிறோம்?
மா, பலா, வாழை.
முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும்.
தொகை என்னும் சொல்லுக்குத் தொகுத்தல் என்பது பொருள்.
சில தொகைச்சொற்களை விரித்துக் காண்போம்.
இருவினை - நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை
இருதிணை - உயர்திணெ, அஃறினை; அகத்திணை, புறத்திணை.
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
முப்பால் - அறம், பொருள், இன்பம்.
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை.
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்.
நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
ஐம்புலன் - தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல்.
ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், செவி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment